எம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்

வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்

ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.

 

கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். வள்ளலின் கார் அவரைக் கடந்து செல்கிற போது, வள்ளலின் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.

 

உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.

“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.

 

நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று வள்ளல் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!

 

லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.

 

“இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் வள்ளலிடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிரக்க வைத்து விட்டது.!

 

வள்ளலின் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகான் வாசனையையும், வைத்து, இது வள்ளலின் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!

 

அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை வள்ளலைப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.

 

“நான் தான் எம்.ஜி.ஆர்”

 

“கேள்விப்பட்டிருக்கிறேன்”

 

பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.

 

“என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”

 

“நான் சினிமாவே பார்ப்பதில்லை. “புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.

 

போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.

 

“ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”

 

“சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. “நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.

 

வள்ளல் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.

 

அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார் வள்ளல்.

 

இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.

 

டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.

 

கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா? என்கிறார். வள்ளலும் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அந்த போலீஸ்காரர்கள்.

 

மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் வள்ளல், போலீஸ்காரர் மறுக்கிறார்.

 

“நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த வள்ளலின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர். பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

 

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்கின்றார்

A story about MGR’s Kindliness