தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை 23-ம் தேதி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி 23-ஆம் தேதி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த தேர்தலில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கத்தில் குளறுபடி இருப்பதால், நிறுத்தி வைப்பதாக சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் சங்க தேர்தலை 23-ஆம் தேதி நடத்தலாம் என்றும், தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகவும் கூறினார்.

மேலும் தேர்தலை நடத்தலாம், ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது என்ற நீதிபதி மறு உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் கட்டளை இட்டார்.
வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.