சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவன் மீது பொதுமக்கள் தாக்குதல்

கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை போலீசார் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்ற போது பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமைடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று சந்தோஷ் குமாரை ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

பரிசோதனை முடிந்து சந்தோஷ் குமாரின் முகத்தை மறைத்து போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, அவனை அடையாளம் கண்டுகொண்ட பொதுமக்கள் தாக்கத் தொடங்கினர்.

ஆத்திரத்தில் இருந்தவர்களிடம் இருந்து சந்தோஷ்குமாரை மீட்ட போலீசார் உடனடியாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.