கோபாலபுரம் இல்லத்திற்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் மருத்துவ உபகரணங்களுடன் வருகை..


உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்த நிலையில், டிசம்பர் மாதம் 1-ம் தேதி அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற கருணாநிதி அதன்பிறகு வீடு திரும்பினார்.

இதற்கிடையே, டிசம்பர் மாதம் 15-ம் தேதி மூச்சு திணறல் காரணமாக கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எளிதாக மூச்சு விடுவதற்காக தொண்டையில் ‘டிரக்கியாஸ்டமி’ என்னும் செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, 9 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் பின்னர் வீடு திரும்பினார்.

அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் கட்சிப் பணிகளை எதுவும் மேற்கொள்ளவில்லை. சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

கடந்த 18-ம் தேதி கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த ‘டிரக்கியாஸ்டமி’ செயற்கை சுவாசக் குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து, வீட்டிலேயே அவரை வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே, கடந்த 24-ந் தேதி அவருக்கு சளித்தொந்தரவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கும் கடுமையாக சிரமப்பட்டார். இதனால், காவேரி மருத்துவமனையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் கருணாநிதிக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். அதற்காக மருத்துவமனையில் இருந்து சில மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன.

சக்கர நாற்காலியில் கருணாநிதியால் உட்கார முடியவில்லை. இதனால், கட்டிலில் அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் நேற்று அவரது கை நரம்பு வழியாக சில மருந்துகளை செலுத்தியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் யாரையும் பகல் நேரத்தில் அவரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.

ஆனால், மாலையில் ஒவ்வொருவராக சென்று கருணாநிதியை பார்க்க டாக்டர்கள் அனுமதித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் சார்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.

அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே ஆஸ்பத்திரி வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.

கருணாநிதியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று டாக்டர் கள் கேட்டுக்கொள்கிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9.45 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.

அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் சென்று இருந்தனர்.