கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன், பேராசியர் முனைவர் க.நெடுஞ்செழியன், பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: ” பிற மொழி உதவியின்றி தனித்து இயங்கக் கூடியது தமிழ் மொழி. 3000 ஆண்டு பழமை கொண்ட தமிழக்கு செம்மொழி என்ற கவுரவத்தைப் பெற்று தந்து திமுக அரசுதான்.

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை வாயிலாக ஆண்டுதோறும், தமிழறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக அதிகளவு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் கலைஞர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியதாகும்.

முதல் விருது 2010-ம் ஆண்டு கோவையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இடையில், 2011-ம் ஆண்டு முதல் 2019 வரை அறிவிக்கப்படாமல் இருந்த அந்த விருதுகளுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் விருதாளர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவிலே பரிசுகள் அளிக்கப்பட்டன.
2020-ம் ஆண்டுக்கான விருது முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரனுக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருது பேராசியர் முனைவர் க.நெடுஞ்செழியனுக்கும், 2022-ம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூய்க் செவ்வியாருக்கும் வழங்கப்படுகிறது. விருதாளர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் நெஞ்சாற பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறினார்.