“தமிழகத்தில் நடக்கும் அக்கிரமம், பிரச்னைகளுக்கு திமுக ஆட்சியில் தீர்வு ” : கனிமொழி எம்.பி..

கனிமொழி எம்.பி

தமிழகத்தின் நடைபெறுகிற அநியாயங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் அடுத்த முதல்வராகும் போது நியாயம் மற்றும் தீர்வு கிடைக்கும் என எம்பி கனிமொழி பேட்டியளித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் தி.மு.க மகளிரணி உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை தி.மு.க மகளிரணி செயலாளர் எம்.பி. கனிமொழி வழங்கினார். சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு தலைமையில் பகுதி செயலாளர் அகஸ்டின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டி அளித்ததன் விவரம்:-

“தொல்லியல் படிப்புகளில் தமிழ் வழியில் படிப்பதற்கு நீக்கம் செய்யப்பட்டது மத்திய அரசின் தமிழ் விரோத போக்கை காட்டுகிறது. பிரதமர் மோடி மக்கள் பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். அதே போல ஊடகங்களின் கேள்விகளுக்கும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

தமிழகத்தில் கொரானா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களில் வடமாநிலத்தவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றதற்கு சென்னை உயர் நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்த பிரச்னைகளுக்கு தி.மு.க ஆட்சியில் தீர்வு காணப்படும்.

உத்தர பிரதேசத்தில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உத்தர பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது. அதன் காரணமாகவே அரசியல் கட்சிகள் இந்த இந்தப் பிரச்னையை கையிலெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றன.

அதிமுக விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஏதும் உட்பூசல் செய்யவில்லை. அவர்களின் பினாமியான பாரதிய ஜனதா கட்சியே அ.தி.மு.கவினர் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கனிமொழி தெரிவித்தார்.