இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா : 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி


இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு சென்றார்.

பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த நான்காண்டுகளில் அவர் இந்தோனேசியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

30-ம் தேதி இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, 31-ம் தேதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த பயண திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் செல்வதற்கு முன்னதாக மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மஹாதிர் முஹம்மதுவை மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வரும் 31-ம் தேதி இந்தியா – சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்.

ஜூன் முதல் தேதி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நான்யாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றும் அவர், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்தியர்களையும் சந்திக்கிறார்.
மகாத்மா காந்தி மறைந்தபோது அவரது அஸ்தி கரைக்கப்பட்ட சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜூன் 2-ம் தேதி திறந்து வைக்கிறார்.