இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மற்றொரு மகத்தான சாதனை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தது.

அதுமட்டுமல்லாமல், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நெருங்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சர்வதேச நிதியம் வெளியிட்ட வரைபடத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அந்த வரைபடத்தில்நடப்பு நிதியாண்டில் வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீனா, பூடான், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் கணித்துள்ளது. அந்த வரைபடத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதம் வீழ்ச்சி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அண்டை நாடான வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி மைனஸில் செல்லாமல் 3.80 சதவீதம் வளர்ச்சி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளம் 2.50 சதவீதம், மியான்மர் 2 சதவீதம், சீனா 1.90 சதவீதம் வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார். அதில் “ பாஜக அரசின் மற்றொரு மகத்தான சாதனை. இந்தியாவைவிட, கரோனாவை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட சிறப்பாகக் கையாண்டுள்ளன” என விமர்சித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ராகுல் காந்தி ட்விட்டரில் இதேபோன்று சர்வதேச நிதியத்தின் வரைப்படத்தை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்திருந்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது என்று கிண்டல் செய்திருந்தார்.

அதில் “ பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது” என்று தெரிவித்து கிண்டல் செய்யும் விதமாக கைதட்டும் படங்களையும் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
.