டிக் டாக் செயலிக்கு தடை நீக்கம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…

டிக் டாக் செயலி மீதான தடையை சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது.

டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தடை விதித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் செயலியே தானாக நீக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதாக டிக் டாக் தரப்பில் வாதிடப்பட்டது.

பேஸ்புக், வாட்ஸ் ஆப்பைக் காட்டிலும் டிக் டாக்கில் அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், இந்தியாவில் சிறுவர்-சிறுமியர்களை பாதுகாப்பதற்கென சரியான சட்டங்கள் இல்லை என கருத்து தெரிவித்தனர்.

அப்போது, மத்திய மின்னணு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,
குழந்தைகளின் தனி உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்ட முன்வரைவு தயாராக உள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதலுக்காக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து டிக் டாக் மீதான தடையை நீக்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், சிறார் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய மாட்டோம் என உறுதி மொழியை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து டிக் டாக் நிறுவனம் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. டிக் டாக் செயலி தொடர்பாக இந்தியாவில் இருந்து வரும் புகார்களை விசாரிப்பதற்கு என நோடல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் டிக் டாக் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில் டிக் டாக் நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை மீறும் பட்சத்தில் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கும் உரிமையியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.