தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே.22ம் தேதியான அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
அப்போது, அந்த பேரணி பெரும் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறிய நீதிமன்றம், 815 பக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணிக்கு முழு தீர்ப்பும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.