தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்


தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் போன்ற திட்டங்களை கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. லண்டன், அரேபியா, வாஷிங்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களும், மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தென்கொரியாவின் சோல் மற்றும் சுவோன் நகரங்களைச் சுற்றியுள்ள தமிழர்கள் சுங்யோன்குவான் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடி அருகிலுள்ள இல்-ஓல் பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள ஆபத்தான திட்டங்களை கைவிட வலியுறுத்தி விண்ணப்பம் தயாரித்து கையெழுத்திட்டு தென் கொரியாவுக்கான இந்தியத் தூதரகத்தில் சமர்ப்பிப்பது குறித்து போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.