தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்


தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவும், காயம் அடைந்தவர்களை நேரில் சந்திப்பதற்காகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு சென்றனர்.

ஆனால் விமான நிலையம் இறங்கிய உடனேயே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி இல்லை தெரிவித்தனர். அத்துடன், தடையை மீறி செயல்பட்டதாக கூறி வேல்முருகன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் போலீசார் இன்று தூத்துக்குடி சென்று மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவரை கைது செய்தனர். கடந்த ஏப்-1ஆம் தேதி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.