எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துள்ளார் திவாகரன்: வெற்றிவேல் குற்றச்சாட்டு…


எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தி கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பு வைத்துள்ளார் என திவாகரன் மீது டிடிவி தினகரன் அணி வெற்றிவேல் முகநூலில் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து முகநூலில் அவரது பதிவு வருமாறு:

”ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் ஆணிவேராக சசிகலாவும், டிடிவி தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கும் மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் டிடிவி தினகரன் செயலாற்றிவருகிறார்.

அவருக்கு பக்கதுணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, சசிகலாவின் பின்னால், நான் உட்பட 18 + 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும், எண்ணிலடங்கா கட்சித் தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம்.

எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தைச் சார்ந்த திவாகரனும், ஜெய் ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.

சசிகலாவின் மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண்பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழிச்சொற்களையும் தினகரன் கட்சியைத் தலைமையேற்று நடத்திய இந்த காலகட்டத்தில் தான் முறியடிக்க முடிந்தது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு மறைந்த மகாதேவனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டப்பேரவை உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்திரமாக எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும்.

மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது என்கிற காரணத்தினால் தான், சசிகலா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்குச் சென்றார். ஆனால் ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப் போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சசிகலாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது உண்மைக்குப் புறம்பானது.

இதனை முதலில் சசிகலா ஏற்றுக்கொள்வாரா? தங்களின் சுய லாபத்திற்காக கட்சியையும், எங்களின் தியாகத்தையும் பலிகடாவாக்க முனையாதிர்கள். நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களைக் குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்

எடப்பாடி பழனிசாமி அணி நிர்வாகியான சத்திரப்பட்டி சிவகிரி என்பவர், 18, சட்டப்பேரவை உறுப்பினர்களும் திவாகரன் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை போன்ற ஒரு பொய் பரப்புரையை செய்கிறார். இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.

எங்கள் தலைமை சசிகலாவும், டிடிவி தினகரனும் தான். இவர்கள் இருவரை தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது, எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது. எதுவரினும், எவர் எதிர்ப்பினும், எங்கள் பயணம் என்றும் சசிகலா, தினகரனுடனும் தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம், காலத்துக்கும் இருப்போம்.”

இவ்வாறு வெற்றிவேல் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து வெற்றிவேலிடம் கருத்துகேட்க அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.